Recent Posts

ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க மாட்டோம். இதன் துவர்ப்புச் சுவை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இருக்கிறது. ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கழிவுகளை, இது வெளியேற்றி விடும்.

நாவல் பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள், தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பழம் சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோய் பாதிப்பு உள்ளவர்கள், நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நோயின் தாக்கம் குறையும்.
நாவல் பட்டையை இடித்து, நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்புகளைப் போக்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் சீசன் காலங்களில், அதனை வாங்கி சாப்பிடுவது உடலுக்கு நல்லது.



நாவல் பழம் - இயற்கை மருத்துவம்

By Unknown → திங்கள், 5 அக்டோபர், 2015


தினசரி உணவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உட்கொண்டால்தான், ஆரோக்கியம் நம்மிடத்தில் நிலைக்கும். போதிய நேரமும், ஆலோசனையும் இல்லாததால், வயிற்றை நிரப்ப ஏதேனும் சாப்பிட வேண்டும் என்றாகி விட்டது. ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்ள பழகுங்கள். நாம் உண்ணும் உணவில், பருப்பு வகைகளை சேர்த்து கொண்டாலே ஆரோக்கியம் நிலைக்கும்.

பருப்பு வகைகளில், பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பவுல் வேக வைத்த பச்சை பயறில், 100 கலோரிகளுக்கு மேல் உள்ளது. இவை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக மட்டுமில்லாமல், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுகிறது. பச்சை பயறை தினசரி சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, பச்சை பயறு ஏற்ற மருந்தாக பயன்படுகிறது. பச்சை பயறு நீண்ட நேரம், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பவுல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒருநாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து கொள்ளும் போது, இரும்புசத்தும் கூடும்.

பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் சுற்றுவோர், பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை உணவில் சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

பச்சை பயறு தரும் ஆரோக்கியம் - இயற்கை மருத்துவம்

By Unknown →

இந்திய உணவு கலாச்சாரம் மருத்துவ குணம் வாய்ந்தது என நாம் அனைவரும் அறிந்தது தான். நாம் உபயோகப்படுத்தும் மசாலா பொருள்களில் இருந்து பருப்பு வகைகள், தானியங்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டியது கீரை வகைகளை பற்றி. பாட்டி வைத்தியம் பற்றி நாம் பேசும் போது அதில் கீரையை தவிர்த்திட முடியாது. ஏனெனில், நமதுபாட்டிமார்கள் வைத்தியம் பார்த்ததே கீரை மற்றும் மூலிகை இலை, கொடிகளை வைத்துதான். கீரையை நம் முன்னோர்கள் தினசரி உணவில் உபயோகப்படுத்தியதன் காரணம், அதனுடைய மருத்துவ குணங்களை அறிந்ததினால் தான்

இன்று நாம் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறோமோ இல்லையோ, வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு செல்கிறோம். இதன் காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான். நமது கால தட்பவெட்ப நிலைக்கு எந்த உணவு உகந்ததோ அதை தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர, இது சுவைமிக்க சுவிட்சர்லாந்து உணவு, இது ஆஸ்திரேலியாவில் பிரசித்திபெற்ற உணவு என நமது உடல்நிலைக்கும், கால நிலைக்கும் பொருந்தாத உணவுகளை உட்கொள்ள கூடாது. நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டுள்ள உணவு கீரை. அதிலுள்ள மருத்துவ குணம் பற்றி நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்...

வெந்தயக்கீரை :-

வெந்தயக்கீரை உடலுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியது. வயிற்றுப்புண்கள் மற்றும் பேதியை குறைக்கும். அதிகமாக இரும்பு சத்துக்கொண்ட இந்த கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான நோய்கள் குறையும்.

முருங்கைக்கீரை :-

இந்த கீரை மிகவும் சக்தி மற்றும் வலிமை வாய்ந்த கீரை ஆகும். அதிக அளவில் இரும்பு சத்து கொண்டது. ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கல் குறையும். உடலின் வெப்பத்தை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் மற்றும் இருதய நோய்கள் தாக்காமல் தடுக்கலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை குறைக்கும். இரத்தச்சோகைகளை குறைக்கும்

அரைக்கீரை :-

அரைக்கீரை உடலில் இருக்கும் விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் காணப்படும். தேமல், சிரங்கு, சொறி போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சிறுகீரை :-

உடலுக்கு ஊக்கத்தை தந்து தளர்ச்சியை போக்க வல்லது. குடல் புண்கள் மற்றும் குடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கல் குறையும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடலில் அதிக பித்தத்தை குறைக்கும்.

அகத்திக்கீரை :-

இந்த கீரை உடலில் காணப்படும் அதிக அளவு வெப்பத்தை குறைக்கும். பித்தம் மற்றும் தலைச்சுற்று, மயக்கம் போன்ற பித்த சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை வாய்ந்தது. அகத்தி கீரையை அளவாக எடுத்து சாப்பிட்டு வந்தால் நோய்களை போக்கும். அளவுக்கு மீறி சாப்பிட்டு வந்தால் பேதி ஏற்படும். எனவே அகத்திக்கீரையை அளவாக உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

மணத்தக்காளி கீரை :-

இது வயிற்றுப்புண்களை போக்கும் திறன் வாய்ந்தது. குடல் புண்களை குறைத்து குடலுக்கு பலம் அளிக்கும். இந்த கீரைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கருப்பை கோளாறுகளை குறைக்கும்.

பாலக்கீரை :-

இந்த கீரை உடலுக்கு வலிமையை தரக்கூடியது. மலச்சிக்கலை குறைக்கும். இதை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும்.

புளிச்சக்கீரை :-

இந்த கீரை உடலுக்கு வளமை தரக்கூடியது. இந்த கீரையை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கடுப்பு, இரத்தபேதி மற்றும் சீதபேதியை குறைக்கும்.

பசலைக்கீரை :-

இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த கிரையை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குடல் புண்களை குறைக்கும்.

கீரைகளில் உள்ள ஆரோக்கிய மருத்துவ குணங்கள்

By Unknown →

சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

சுண்டைக்காய் வற்றல் - இயற்கை வைத்தியம்

By Unknown →


மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். 

• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது.

• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.

• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம்.

• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை – நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது.

• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

உடல் நலத்தை பாதுகாக்கும் பரங்கிக்காயின் மருத்துவ குணங்கள்

By Unknown →
தர்பூசணிப்பழச் சாறு:

கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும்.

நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.

அத்திப்பழச்சாறு:

அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.

இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும்.

அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..

ஆப்பிள் பழச்சாறு:

ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.

திராட்சைச் சாறு:

திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.

திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.

ஆரஞ்சுச் சாறு:

தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.

இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.

எலுமிச்சைச் சாறு:

பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.

தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.

இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.

உடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.

பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.

தக்காளிச் சாறு:

தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.

மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.



இயற்கை பழச்சாறுகளின் மகத்துவம்

By Unknown →

பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, லுடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்களாகும். அதற்கு பாகற்காயை சரியாக சமைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு பலரும் அடிமையாகிவிடுவீர்கள். பின் பாகற்காய் என்றாலே விரும்பி சாப்பிடுவீர்கள். சரி, இப்போது பாகற்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

சுவாச கோளாறுகள் :-

பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாச கோளாறுகளுக்கு விரைவில் தீர்வு காணலாம்.

கல்லீரல் பிரச்சனைகள் :-

தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்கி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி :-

பாகற்காய் மட்டுமின்றி, அதன் இலைகளும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். அதிலும் அதன் இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை தினமும் குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பருக்கள் :-

உங்களுக்கு பருக்கள், சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை அதிகம் ஏற்பட்டால், பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.

நீரிழிவு :-

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஏனெனில் பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மை இன்சுலின் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மலச்சிக்கல் :-

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், பாகற்காயை வாரத்திற்கு 2-3 முறை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

ஆரோக்கியமான சிறுநீரகம் :-

பாகற்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய நோய் :-

பாகற்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

புற்றுநோய் :-

பாகற்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

எடை குறைவு :-

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். மேலும் உடலின் மெட்டபாலிசம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு அதிகரித்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். முக்கியமாக பாகற்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் தண்ணீர் 80-85% சதவீதம் உள்ளதால், இதனை உட்கொண்டால், வயிறும் விரைவில் நிறைந்துவிடும்


பாகற்காயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By Unknown →