புழுவெட்டு

By Unknown → வியாழன், 13 மார்ச், 2014
Advertise
புழுவெட்டு

புழுவெட்டு எனும் நோய் முடி இருக்கும் இடங்களில் வட்ட வட்டமாக முடியை உதிரச்செய்யும் நோயாகும்.தலைமுடி,மீசை, தாடி மற்றும் புருவமுடிகளைக் கூட தாக்கும் இயல்புடையது.ஆரம்பத்தில் சிறிய பொட்டு போல உருவாகி,நாணய வடிவாகி,பரவி உடலிலுள்ள அனைத்து முடிகளையும் உதிரச் செய்யும் தன்மையுடயது.

புழுவெட்டிற்கு மருந்தாக கைவைத்தியமாக குணபாடம் மூலிகை நூலில் கூறியபடி,சிறிய வெங்காயம்-இரண்டு, மிளகு- இரண்டு ,கல்லுப்பு-ஒரு சிட்டிகை மூன்றையும் அம்மியில் அரைத்து,புழுவெட்டு பாதித்த இடத்தில் தடவி வர, இரண்டுநாட்களில் வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும்.அந்நிலையில் மேற்கண்ட கலவையை பூசவதை ஒருநாள் நிறுத்திவிட்டு மறுநாள் முதல் மீண்டும் பூசவும்.முடி முளைக்கும் வரை மேற்கண்ட கலவையை பூசுவதும் சொரசொரப்பு வந்தவுடன் நிறுத்திப் பின் மறுநாள் பூசுவதையும் தொடரவேண்டும்.ஐந்தாறு நாட்களில் முடி முளைக்கத் தொடங்கும். முதலில் பூனைமுடி போல முளைக்கத் தொடங்கி பின் இயல்பான முடியாக சில வாரங்களில் முளைத்து விடும்.

முடி முளைக்கத் தாமதப்படும்போது அவ்விடத்தில் கரிசாலை மடக்குத் தைலம் தேய்த்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.அதே போன்று மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தால் உள் மருந்தாக இரசகந்தி மெழுகை காலை மாலை ஒரு மாதம் உண்டுவர விரைவில் நலம் பெறலாம்.

மேற்கண்ட முறையில்தான் புழுவெட்டிற்கு சிகிச்சையளித்து வருகிறேன் என்றாலும் வெங்காயம் மிளகு உப்பை அரைத்துப் பூசும் வசதி இல்லாத குறிப்பாக விடுதியில் தங்கியிருப்போர்,பிரம்மச்சாரிகள் போன்றோருக்கு குணப்படுத்துவதில் சற்று சிரமமிருந்தது .இன்னும் எளியமுறையில் குணப்படுத்த இயலுமா என்று பலவாறாகச் சிந்தித்து ஒன்றும் புலப்படாத சூழலில்,வாழும் சாம்பசிவம் பிள்ளைக்கு அலைபேசினேன்.”தம்பி நல்லாருக்கியா” வாஞ்சையோடு நலம் விசாரித்தது அவர் குரல்.எனது ஐயத்தை அவரிடம் கேட்டேன்.”அப்படியா பேசாம நீ அந்த தைலத்தை தடவச் சொல்லு எல்லாம் சரியாயிரும்”என்றார்.நான் சற்று அதிர்ச்சியானேன்;ஏனெனில் அவர் தடவச் சொன்ன தைலம் மகளிர் நோய்களுக்கு உள்ளுக்கு கொடுக்கும் தைலமாகும்! ஆயினும் அவர் சொன்னது பொய்க்காது என்ற நம்பிக்கையில் கொடுத்து குணம்கண்ட அனுபவங்களை இவண் பகிர்கிறேன்.

அனுபவம் 1:

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சுப்பிரமணியன் மழுமழுவென மழித்த முகத்துடன் தலையில் தொப்பியோடு என்னைச் சந்தித்தபோது புவிக்கு அவர் வந்து பத்தாயிரத்து முப்பதாறு நாட்களாயிருந்தது.தொப்பியை கழட்டியபோது,திருப்பதியிலிருந்து அரைகுறையாக வந்ததுபோன்று தலைமுடியில் ஆங்காங்கே வட்டவட்டமாக இடைவெளி. புழுவெட்டு வந்து ஒருவருடம் ஆகிவிட்டதாகவும் பல முண்ணனி அழகுநிலையங்களிலும் ,சிகிச்சை எடுத்ததாகவும் பலனில்லையெனவும் வருத்தப்பட்டார்.தனக்கு அழகே மீசை தாடிதான் எனவும் தற்போது அவையில்லாமல் தன் முகத்தையே தான் பார்க்க விரும்புவதில்லையெனவும் விசும்பினார்.நான்,வாழும் சாம்பசிவம்பிள்ளை கூறிய தைலத்தை வெளிப்புறமாகத் தேய்த்து வரும்படியும் இருவாரங்கள் கழித்து என்னைச் சந்திக்க வரும்படியும் அறிவுறுத்தினேன்.

இருவாரங்களில் மீசையிலும் தாடியிலும் பூனைமுடிபோல முளைக்கத் தொடங்கியிருந்தது.சுப்பிரமணியன் முகத்திலும் நம்பிக்கை பிறந்திருந்தது.நான்கு வாரங்களில் தலையிலும் முடிமுளைக்க ஆரம்பித்ததாக அலைபேசிய சுப்பிரமணி ஒருமாதம் onsite போய்விட்டு வருவதாக கூறினார். ,அறுபது நாட்களில் மீண்டும் வந்த சுப்பிரமணியன் அவர் கூறியவாறு தாடிமீசையுடன் அழகாகத்தான் இருந்தார்!

அனுபவம்-2

நடுவுல கொஞ்சம் புருவத்தைக் காணோம் என்று புலம்பியபடியே வந்த சீனிவாசன் ஒரு கால் டாக்சி ஓட்டுநர்.முதலில் தாடியிலிருந்ததாகவும் அதனாலேயே தான் தாடியை தினமும் மழித்து விடுவதாகவும் தற்போது புருவமுடிகளையும் பாதித்திருப்பதாகவும் பரிதாபமாகக் கூறினார்.மேற்படித் தைலம் பயன்படுத்தியபின் முப்பதுநாட்களில் முழுப் புருவமும் தாடியும் பெற்றார்.

மேற்படித் தைலம் என்ன எனக் கேட்கிறீர்களா? என்ன, முதலிலேயே கண்டுபிடித்துவிட்டீர்களா! ஆம் அதேதான்,

“கலிங்காதி தைலமே”தான் !

கலிங்காதி தைலம் மகளிர் நோய்களான சூதகக்கட்டு,சூதகத் தடை,சூதகக் கிருமிகளுக்கு உள்ளுக்கு வழங்கப்படும் தைலமாக பலகாலமாக பயன்பாட்டில் உள்ளதாகும் .அதில் சேரும் சரக்குகளான வெங்காயச்சாறு,வெள்ளைப்பூண்டுச்சாறு, மலைவேம்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, வரிக்குமட்டிச்சாறு போன்ற அனைத்துச் சரக்குகளுமே புழுவெட்டிற்காக வெளிப்புறமாக பூசுவதற்கென தனத்தனியாக நூற்களில் கூறப்பட்டிருக்கிறது.

ஆதலால் தான் வாழும் சாம்பசிவம் இத்தைலத்தை என்னை பயன்படுத்துமாறு கூறியிருக்கிறார் என்றெண்ணி சிலிர்த்தேன் !
என்னது வாழும் சாம்பசிவம் பிள்ளை யாரேன்றா கேட்கிறீர்கள்?

“மரு. பாவநாசன் .மைக்கேல் செயராசு” அன்றி வேறார்?!

சரிதானே…
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " புழுவெட்டு "

Your Comment Has Been Published!